தமிழக சட்டசபை நிகழ்வுகளால் ஜனநாயகத்திற்கே அவமானம்: வெங்கையா நாயுடு
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த சம்பவம் குறி்த்து தாம் வேதனைப்படுவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
டெல்லி: தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட அமளியின் காரணமாக சட்டசபை போர்க்களமானது. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது.
எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றிய பின் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று நடந்தது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நான் வேதனைப்படுகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.