கேரள உபரி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்த எடப்பாடி!
கேரள மாநிலத்தின் உபரி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கேரள மாநிலத்தின் உபரி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். அணி அணியாக எம்எல்ஏக்கள் சந்திப்பு, வருமான வரித்துறை ரெய்டு என தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்நிலையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
தடுப்பணைகளுக்கு தடை
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறினார். மேலும் பம்பா, அச்சன் கோவிலுக்கு செல்லும் உபரி நீரை தமிழகத்திற்கு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மீண்டும் ஒரு முறை பிரதமரை வலியுறுத்தியதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றித்தர கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
ரூ.500 கோடி மானியம்
மேலும் குடி மராமத்து பணிக்கு ரூ.500 கோடி நிதியை மானியமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.தமிழக மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.
அரசியல் இல்லை
அதேபோல் மத்திய அரசு திட்டங்களுக்கு தரவேண்டிய 17 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.