அகமதாபாத் தமிழ்ப் பள்ளி- மீண்டும் திறங்க- செலவை நாங்க ஏற்கிறோம்:குஜராத் முதல்வருக்கு எடப்பாடி கடிதம்
சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்; இந்த தமிழ்ப் பள்ளிக்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். குஜராத் அரசின் உயர் பொறுப்புகளிலும் தமிழர்கள் பதவி வகித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி போட்டியிட்ட மணி நகர் தொகுதியில் பெருமளவு தமிழர்கள் வசிக்கின்றனர். இம்மாநிலத்தில் மொத்தம் 7 தமிழ் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் அகமதாபாத்தில் 81 ஆண்டுகளாக இயங்கிய தமிழ் வழிப் பள்ளியை அம்மாநில அரசு திடீரென மூடியது. இதற்கு எதிராக குஜராத் வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழ் வழிப் பள்ளியில் போதுமான மாணவர் சேர்க்கை இல்லை; இதனால் இந்த பள்ளிக்கு நிதி ஒதுக்க முடியாது என கூறி குஜராத் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. குஜராத்தில் தமிழ் வழிப் பள்ளி மூடப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதனிடையே குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், குஜராத்தின் வளர்ச்சிக்கு தமிழர்கள் அதிகளவு பங்களிப்பு செய்து வருகின்றனர். அகமதாபாத் தமிழ் வழி மேல்நிலைப் பள்ளி மூடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இந்த பள்ளியை நடத்துவதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும். ஆகையால் பள்ளிக்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.