19 ஆண்டுக்குப் பின் நாளை தமிழக காங். பொதுக்குழு... இந்த தீர்மானங்களை நிறைவேற்றத்தான்!
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் 19 ஆண்டுகளுக்குப் பின் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன என்கின்றன காங். வட்டாரங்கள்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. தமிழக காங்கிரஸிலும் கடந்த சில மாதங்களாக இப்பணி நடைபெற்று வந்தது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அகில இந்திய தலைவரை நியமிப்பதற்கு மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் ஒப்புதல் அவசியம்.
பொதுக்குழு உறுப்பினர்கள்
இதனால் காங்கிரஸ் மேலிடம் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கமிட்டியின் பொதுக்குழுவை கூட்டி அதன் தீர்மானத்தைப் பெற்று வருகிறது. இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களை நியமிப்பதிலும் காங்கிரஸ் தீவிரம் காட்டியது.
பொதுக்குழு கூட்டம் சென்னையில்
மாவட்டத்துக்கு 15 பொதுக்குழு உறுப்பினர்கள் அவசரகதியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்களில் ஏகப்பட்ட அக்கப்போர்கள் என்பது தனி விவகாரம்.
தலைமை தாங்குவது?
இப்படி நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு நாளை பொதுக்குழு நடைபெற உள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தேர்தல் அதிகாரிகள் சஞ்சய் தத், பாப்பிராஜூ ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். வழக்கமாக பொதுக்குழுவுக்கு திராவிட கட்சிகளில் தலைவர் அல்லது பொதுச்செயலர் தலைமை வகிப்பர். காங்கிரஸில் தேர்தல் அதிகாரிகளே தலைமை வகிக்கின்றனர்.
ராகுலுக்காக தீர்மானம்
இப்பொதுக்குழுவில் ராகுல் காந்தியை அகில இந்திய தலைவராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுத்து நியமிக்கும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.