மேகதாது அணைக்கு நிதி ஒதுக்கீடு- சித்தராமையாவுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம்!!
பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 5912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்கள் கண்டித்துள்ளன.
தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை ஒன்றை கட்டப் போவதாக கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவானது.
இந்நிலையில், 70வது சுதந்திர தினம் கொண்டாடிய கர்நாடாக முதலமைச்சர் சித்தராமையா, மேகதாதுவில் அணை கட்ட 5912 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக பேசி உள்ளார். இதற்கு தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தலைவர் பாண்டியன் கூறுகையில், சித்தராமையா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பேசி, அவமதிப்பு செய்துள்ளார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஒரு மாநில முதலமைச்சர் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. அணை கட்டும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றார்.
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ஜீவக்குமார் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்டி தமிழ்நாட்டை அழிப்பது போல கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்றும் வழக்கம் போல் தமிழகம் அமைதி காக்காமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தனபால் கூறுகையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. இதனால் 16 லட்சம் விவசாயத் தொழிலாளர்களும், 4 லட்சம் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சித்தராமையாவின் இந்தப் பேச்சு பேரடியாக தமிழக விவசாயிகள் மேல் விழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தைத் சேர்ந்த ரவீந்திரன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் வரதராஜன் உள்ளிட்ட தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகள் சித்தராமையாவின் இந்தப் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.