கடன் தள்ளுபடி செய்யுங்கய்யா.. எலும்புக் கூடுகளுடன் தமிழக விவசாயிகள் 3வது நாளாக டெல்லியில் போராட்டம்
எலும்புக் கூடுகளுடன் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 3வது நாளாக இன்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி: தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் 3வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
Recommended Video
சுமார் 41 நாள்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மீண்டும் போராட்டம்
இந்நிலையில், வாக்களித்தபடி முதல்வரும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கோரி, தமிழக விவசாயிகள் மீண்டும் தங்களது போராட்டத்தை டெல்லியில் தொடங்கியுள்ளனர். முதல் நாள் அவர்களை போலீசார் கைது செய்தாலும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கொட்டும் மழையில் போராட்டம்
நேற்று டெல்லியில் கனமழை பெய்தது. கொட்டும் மழையிலும், அரை நிர்வாணத்துடன் தமிழக விவசாயிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கொண்டு சென்ற துணிமணி உள்ளிட்ட உடைமைகளை வைக்கக் கூட இடம் இல்லாமல் தவித்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கொண்ட லட்சியத்திற்காக போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள்.
3வது நாள் போராட்டம்
இந்தப் போராட்டம் இன்றும் 3வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று எலும்புக் கூடுகளுடன் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்தோடு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தொடரும்
போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு, தமிழக அரசு, கடன் தள்ளுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. அந்த வழக்கு திரும்ப பெறப்படும் என்று தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இவை எல்லாம் முறைப்படி நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்ற கூறினார்.