இன்னுமா நாம மாறல.. குழந்தை திருமணத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
குழந்தைகள் திருமணத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் குழந்தைகள் திருமணம் அதிகமாக தமிழகத்தில் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன்பு குல வழக்கப்படி நடைப்பெற்று வந்த குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு நாடு முழுவதும் அதற்கு தடை விதிக்கப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டும் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் திருமணம் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக தகவல்கள் கிடைத்தவுடன் குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பல குழந்தைகளை மீட்டும் வருகின்றனர். ஆனாலும் குழந்தைகள் திருமணங்களை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.
இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய அளவில் அதிகளவு திருமணம் நிகழும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குழந்தைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 55 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை கர்நாடகமும், மூன்றாவது இடத்தை மேங்கு வங்கமும் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல நாடு முழுவதும் 326 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளையில் இமாச்சல பிரதேசம், பீகார், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர், கோவா, சண்டிகர், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.