தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து: தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமார், முதல்வர் பற்றி விமர்சனம் செய்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அமளி உருவானது.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சபை காவலர்களை தாக்கிய தாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான மோகன்ராஜ், பார்த்திபன், சந்திரகுமார், தினகரன், வெங்கடேசன், சேகர் ஆகிய தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இடை நீக்கம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல எனக்கூறி சீராய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.