19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி... ராஜ்நாத் சிங் உடன் ஆளுநர் நாளை ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ளதால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
மும்பை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓபிஎஸ் அணியும் அணியும் திங்கட்கிழமை இணைந்து விட்டன. ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகியுள்ளார். இதற்கு தினகரன் அணி எம்எல்ஏக்கள் 19 பேர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
19 எம்எல்ஏக்கள்
ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து 19 எம்எல்ஏக்களும், முதல்வர் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
பெரும்பான்மை
தற்போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு 112 அல்லது 113 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. எடப்பாடி அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 117 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அதன்படி தற்போது 5 எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு குறைவாகவே உள்ளது.
எதிர்கட்சிகள் கடிதம்
ஒரு அரசு பெரும்பான்மையை இழக்கும்பட்சத்தில் உடனடியாக சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டியது ஒரு ஆளுநரின் பொறுப்பாகும். எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்ற திமுக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆளுநர் டெல்லி பயணம்
இதனிடையே மும்பையில் உள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் நாளை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.