பாடகர் கோவன் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்!
டெல்லி: மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இடதுசாரி அமைப்பான ம.க.இ.க.வைச் சேர்ந்த பாடகர் கோவன் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாடியலில் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஜாமீன் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே கோவனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையின் போது போலீசாரால் கோவன் மீதான தேசதுரோக வழக்கு ஏன் என்பதை விவரிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் கோரிக்கையை நிராகரித்து கோவனுக்கு ஜாமீன் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கோவன் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் கோவனுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் கோவனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.