நிர்வாக பணிகளுக்காக கூட ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்
டெல்லி: நிர்வாக பணிகளை மேற்கொள்ள கூட ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அரசு உத்தரவுப்படி அந்த ஆலைக்கு கடந்த மே 28ம் தேதி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து வேதாந்தா குழுமம், டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், ஸ்டெர்லைட்டில் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள கடந்த 9ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம், வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும்தான் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது என்று உறுதியாக தமிழக அரசால் கூறமுடியுமா? நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்று கூறுகிறீர்கள், ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு ஆகிறது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? இதுதொடர்பாக அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தி உள்ளீர்களா? அப்படி நடந்திருந்தால் அந்த ஆய்வு முடிவுகள் எங்கே? என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கேட்டிருந்தது.
அந்த கேள்விகள் எதற்கும் தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மிக முக்கியமாக கோரிக்கையாக நிர்வாக பணிகளை செய்ய அனுமதிக்குமாறு ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலையை இயக்க உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் அதற்கு தாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், எனவே எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வரி தாக்கல் உள்ளிட்ட விவகாரங்களை பார்க்கவும் நிர்வாக பணிகளுக்காக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவேதான், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக ரீதியிலான பணிகள் நடத்திக்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், அனுமதி வழங்கியிருந்தது.
தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிரான ஒரு உத்தரவு இது என்பதால் தமிழக அரசு விமர்சனங்களுக்கு உள்ளானது. கருணாநிதி உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர கூடாது என நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞரை வைத்து வாதிட்ட, தமிழக அரசு, ஸ்டெர்லைட் விஷயத்தில் மெத்தனம் காட்டிவிட்டது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்திருந்தார்.
தமிழக அரசு பிறப்பித்த அரசாணைப்படி ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூட வேண்டும். எனவே, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவையடுத்து, தலைமைச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தில் இன்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிராக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.
நிர்வாக பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கினால், ஆதாரங்கள், ஆவணங்களை ஆலை நிர்வாகம் அழித்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று மனுவில் தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.