தமிழகம், கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- தெலுங்கானா, புதுவையில் அனுமதி!!
சென்னை/பெங்களூரு: தமிழகம் மற்றும் கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கானா, புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா கால கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 2020-ம் ஆண்டு விடைபெற்று 2021 புதிய ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் மாநில அரசுகள் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன.
தமிழகத்தில் கடை
தமிழ்நாட்டில் சென்னையில் இன்று இரவு 10 மணியுடன் அனைத்து ஹோட்டல்கள், பார்கள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடவும் அனுமதிக்கப்படவும் இல்லை. அதிகாலையில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டாலும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி இருப்பவர்கள் வழிப்பாட்டுத் தலங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறியுள்ளது தமிழக அரசு.
கேரளாவில் பட்டாசுக்கு அனுமதி
கேரளாவில் புத்தாண்டு கொண்ட்டாட்டங்களை முன்னிட்டு ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களையும் இன்று இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் இன்று இரவு 11.55 முதல் அதிகாலை 12.30 மணி வரை மட்டும் பட்டாசுகள் வெடிக்கவும் கேரளா அரசு அனுமதித்துள்ளது.
புதுவையில் குழப்பம்
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான குழப்பமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு பொதுவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் இருந்து யாரும் வரக் கூடாது என ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டிருக்கிறார். இருப்பினும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானாவில் அனுமதி
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அதிகாலை 1 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் அனுமதி பெற்று இந்த கொண்டாட்டங்களை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தடை
கர்நாடகாவின் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறும் ஒன்று கூடல்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. 4 பேருக்கு மேல் பெங்களூருவில் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகளில் இ டோக்கன்கள் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மகா.-ல் தடை
மகாராஷ்டிராவில் ரெஸ்டாரன்டுகள், பப்கள் அனைத்தும் இரவு 11 மணிக்கு மூடப்பட வேண்டும்; இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு ஜனவரி 5-ந் தேதி வரை கடைபிடிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இருப்பினும் 4 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாடிகளில் படகுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
நொய்டாவில் அனுமதி
டெல்லியில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கொரோனா கால இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இரவு நேர ஊரடங்கின் போது 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடக் கூடாது. நொய்டாவில் 100 பேர் வரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம். ஆனால் போலீசாரின் அனுமதியைப் பெற வேண்டும்.
இரவு நேர ஊரடங்கு
ராஜஸ்தானில் மக்கள் தொகை 1 லட்சத்துக்கும் அதிகமான நகரங்கள் அனைத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரவு 7 மணியுடன் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஹைகோர்ட் உத்தரவு
மேற்கு வங்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தல் விடுத்திருக்கிறது. கொல்கத்தாவில் பெரிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்ட ஒன்று கூடல்கள் கூடாது எனவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட்டில் தடை
உத்தரகாண்ட் மாநிலத்தில் அனைத்துவிதமான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டேராடூன், மிசோரி, ரிஷிகேஷ் என் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களிலும் இந்த தடை அமலில் உள்ளது.