20 தமிழர் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி: ஆந்திராவால் 20 தமிழர் படுகொலை செய்யப்பட்டதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பதி அருகே 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச்சை அணுகி இச்சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோரினார்.
ஆனால் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இதனை நிராகரித்து, இது தொடர்பாக நீங்கள் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்யுங்கள்.. நாங்கள் விசாரிக்கிறோம் என்று தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், ஆந்திரா காவல்துறை நடத்தியது போலி என்கவுண்ட்டர்தான்.. இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.