இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதே திமுகவினரின் வாடிக்கை... அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம்!
திமுக தலைவர் கருணாநிதி வழியிலேயே வைரமுத்துவும், கனிமொழியும் இந்து மதத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பதி: கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்துகள் பொதுவாகவே திமுகவினர் இந்து மதத்தை இழிவுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பதையே பிரதிபலிப்பதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்துகள் பொதுவாகவே திமுகவைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தைப் பழிப்பதை, இழிவுபடத்தும் செயலை தங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்பதையே காட்டுகிறத.
திமுக தலைவர் கருணாநிதி எவ்வழியோ அவ்வழியே அனைத்து தொண்டர்களும் அவரைப் பின்பற்றி இந்து மதத்தை புண்படுத்துபவர்களாகவே உள்ளனர். இதையே வழக்கமான நடைமுறையாக கொண்டிருக்கிறார்கள் திமுகவினர் என்பது நிதர்சனமான உண்மை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
சேதுசமுத்திரத் திட்டத்தை பற்றி ஒரு உரையாடல் வருகின்ற நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி ராமர் என்ன பெரிய கட்டடப் பொறியாளரா வல்லுநரா என்று சொல்லி விமர்சனம் செய்தார். இதுபோல பல்வேறு சம்பவங்கள் இருக்கின்றன.
அந்த வழியாகத் தான் தான் இன்று கனிமொழி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதே என்னடைய கருத்து என்ற கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து மீதான தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ திமுகவினரே இப்படித் தான் என்பது போல கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.