திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக தமிழக கண் மருத்துவ மாணவர் உள்பட இருவர் கைது
திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக தமிழக கண் மருத்துவ மாணவர் உள்பட இருவரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி: திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக வேலூர் மாவட்ட மருத்துவ மாணவர் உள்பட இருவரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக பகுதி நேரமாக கார் ஓட்டியபோது பொய்யாக தன்னை கைது செய்ததாக மாணவர் தெரிவித்தார்.
திருப்பதி அருகே உள்ள வனப்பகுதிகளில் செம்மரக்கட்டைகளை கடத்தும் கும்பலை பிடிப்பதற்காகவும் கடத்தலை தடுப்பதற்காகவும் ஏராளமான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் இன்று செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது கரக்கம்பாடி சாலையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போலீஸார் காரில் செம்மரம் கடத்தியதாக வழக்கு பதிவு செய்ய முற்பட்டனர். மேலும் காரில் டிரைவராக இருந்த வேலூரை சேர்ந்த அஜித் மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இயேசு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கடத்துவதற்காக வைத்திருந்த 9 செம்மரங்களை பறிமுதல் செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் கார் ஓட்டி வந்த அஜித்தோ, தான் திருவண்ணாமலையில் கண் மருத்துவம் பயிலும் மாணவர் என்றும் செம்மரம் கடத்தியதாக ஒப்புக் கொள்ளுமாறு தன்னை ஆந்திர போலீஸார் சித்தரவதை செய்தனர் என்றும் தெரிவித்தார்.
இதை தடுக்க வந்த பத்திரிகையாளர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தனராம். இந்த சம்பவம் குறித்து அஜித் கூறுகையில் நான் திருவண்ணாமலை கண் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறேன். எனது தாய் வீட்டு வேலைகளை பார்த்து சிரமப்பட்டு படிக்க வைக்கிறார். இதனால் நானும் கல்லூரி விடுமுறை நாட்களில் கார் ஓட்டி வருகிறேன்.
இந்த நிலையில் அவரை திருப்பதி கோயிலுக்கு செல்ல கார் ஓட்ட வேண்டும் என கூறி பிரபு என்பவர் அனுப்பி வைத்துள்ளார். அதை உண்மை என்று நம்பிச்சென்றவர் செம்மர கடத்தல்காரர்களுக்கு வாகனத்தை ஓட்டிச்சென்றதாக போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன் என்றார் அவர். இதுகுறித்து திருப்பதி காவல் ஆய்வாளர் முரளியிடம் கருத்து கேட்க முயன்றபோது அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.
அஜீத் மீது செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். அஜீத் மற்றும் இயேசு ஆகிய இருவரும் செவ்வாய்கிழமை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.