கர்நாடகா பொய் சொல்கிறது.. 15,000 கன அடி நீரை அது விடுவிக்கவில்லை.. தமிழக அரசு புகார் #TNNeedsKaveri
டெல்லி: தமிழகத்திற்கு விநாடிக்கு 15,000 கன அடி நீரை விடுவித்திருப்பதாக கர்நாடகம் கூறியதில் உண்மை இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விடவில்லை என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சசி சேகருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி. ராம்மோகன் ராவ் எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:
செப்டம்பர் 7ம் தேதி நிலவரப்படி கர்நாடக அரதசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதாக அது கூறியது தவறு. அந்த அளவுக்கு தண்ணீர் பிலிகுண்டுலுவில் பதிவாகவில்லை.
கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கர்நாடக அரசு கர்நாடகத்திலிருந்து பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீர் வீதம் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை கர்நாடக அரசு கடைப்பிடிக்கவில்லை. அந்த அளவுக்கு தண்ணீரை அது விடுவிக்கவில்லை.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப் படி, 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 100.670 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 35.91 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. 64.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் விடுவிக்கவில்லை.
தனது பல்வேறு கால்வாய்கள் மூலமாக தனது அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டு தனது பாசனத்திற்குப் பயன்படுத்தி வருகிறது கர்நாடகா. மேலும் செப்டம்பர் 9ம் தேதி நிலவரப்படி தனது நான்கு முக்கிய அணைகளிலிருந்தும் 30 டிஎம்சி தண்ணீர் வரை எடுத்து பயன்படுத்தியுள்ளது என்றும் ராம் மோகன் ராவ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.