கெய்ல் எரிவாயு திட்டம்: சீராய்வு மனுவைவிட மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தீர்வு காண வலியுறுத்தல்!!
டெல்லி: கெய்ல் எரிவாயு திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்வதைவிட மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிவாயு திட்ட பாதையை மாற்றுவதற்குதான் முயற்சிக்க வேண்டும் என சட்ட வல்லுநர்களும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்துகின்றனர்.
இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு செல்வதற்கான திட்டத்தினை மத்திய அரசின் கெய்ல் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக மங்களூருவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த எரிவாயு குழாய்களை தமிழகத்தில் 7 மாவட்ட விவசாயிகளின் விளைநிலங்கள் வழியே பதிக்கும் பணிகள் தொடங்கின.
இதற்கு விவசாயிகள் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் நீதிமன்றத்துக்குப் போனது கெய்ல் நிறுவனம். முதலில் கெய்ல் நிறுவனத்துக்கு ஆதரவாக இருந்த தமிழக அரசு, மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
நீதிமன்றங்கள் தீர்ப்பு
கெய்ல் எரிவாயு குழாய் திட்டத்தைத் தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் கெய்ல் திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் தீர்ப்பளித்தது.
சீராய்வு மனு குறித்து ஆலோசனை
இது தமிழகத்துக்கு பேரிடியாக இறங்கியது. ஆனாலும் தமிழக விவசாயிகள் கெய்ல் எரிவாயு பதிக்கும் திட்டத்தை அமல்படுத்தவிடமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்வது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஈகோவிட்டு கொடுக்கனும்
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதைக் காட்டிலும் மத்திய அரசுடன் 'ஈகோ' பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்தி எரிவாயு குழாய் பதிக்கும் திட்ட பாதையை மாற்ற முயற்சிப்பதே தீர்வுக்குரிய வழி என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பிரச்சனை இது..
விவசாயிகளைப் பொறுத்தவரையில் விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கப்படும் போது ஆழ ஊடுருவும் வேர்களைக் கொண்ட தென்னை, மா, பலா போன்றவற்றை சாகுபடி செய்ய இயலாது; எரிவாயு குழாய்களுக்கு சேதம் ஏற்படும் நிலையில் விவசாயிகளே பொறுப்பேற்று சிறைக்கு போகும் நிலை இருக்கிறது.. இந்த இரு அம்சங்களால் ஒருபோதும் கெய்ல் எரிவாயு திட்டத்தை ஏற்கவே முடியாது என்கின்றனர்.
பேச்சுவார்த்தைதான் சரி
ஆகையால் மாற்றுப் பாதையில்தான் எரிவாயு குழாய்களைப் பதிப்பிக்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கை. மேலும் பிற மாநிலங்களில் எல்லாம் நெடுஞ்சாலைகளையொட்டி எரிவாயு குழாய்கள் பதிக்கும் போது தமிழகத்தில் மட்டும் விளைநிலம் வழியே கொண்டு செல்ல அடம்பிடிப்பது ஏன் என்ற கேள்வியையும் விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
இதனால் நீதிமன்றத்துக்குப் போய் மீண்டும் மீண்டும் குட்டு வாங்கிக் கொண்டு விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடுவதைக் காட்டிலும் மத்திய அரசுடன் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுப் பாதையில் கெய்ல் எரிவாயு குழாய் பதிப்பதற்கான நடவடிக்கையே சரியானது என்பதே சட்ட வல்லுநர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்களின் கருத்து.