குஜராத் மருத்துவக் கல்லூரியில் சாதிய பாகுபாடு... தமிழக மாணவர் மாரிராஜ் தற்கொலை முயற்சி!
குஜராத் மருத்துவக் கல்லூரியில் சாதிய பாகுபாடு காரணமாக தமிழகத்தை சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஹமதாபாத் : குஜராத் மருத்துவக் கல்லூரியில் சாதிய பாகுபாடு காரணமாக தமிழகத்தை சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஹமதாபாத்தின் பிஜே மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரி ராஜ் என்ற இளைஞர். 3ம் ஆண்டு மருத்துவ உயர் படிப்பு படித்து வரும் மாரிராஜ், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாரிராஜ் கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால் மயங்கிய நிலையில் விடுதி அறையில் கிடந்த மாரிராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாரிராஜின் தற்கொலைக்கு கல்லூரியில் உள்ள சாதிய பாகுபாடு தான் காரணம் என்று அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். மாரிராஜ் உயிர் பிழைத்தால் மட்டுமே உண்மை நிலை என்னவென்பது தெரியும். இந்நிலையில் மாரிராஜ் தற்கொலை முயற்சியையடுத்து அவரது குடும்பத்தார் குஜராத் விரைந்துள்ளனர்.