நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகள் விலக்கு கோரும் தமிழக அவசர சட்ட வரைவு- மத்திய அரசிடம் ஒப்படைப்பு!
நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகள் விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்தின் வரைவு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நீட் தேர்தவில் இருந்து தமிழகத்துக்கு 2 ஆண்டுகளுக்கு விலக்கு கோரும் அவசர சட்டத்தின் வரைவை உள்துறை அமைச்சகத்திடம் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார்.
மருத்துவபடிப்பு மாணவர் சேர்க்கையை நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் நடத்த வேண்டும் என்கிறது மத்திய அரசு. இதற்காக நீட் தேர்வும் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான நீட் தேர்வால் பாதிக்கப்படுவர் என்பது தமிழகத்தின் வாதம். இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
நீட் மசோதா
இதையடுத்து நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு தரும் அவசர சட்ட மசோதா தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்னமும் இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.
கனவு தகரும் நிலை
தற்போது நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் தமிழக மாணவர்கள் போதுமான மதிப்பெண்களைப் பெறவில்லை. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகரும் நிலை உருவாகி உள்ளது.
அவசர சட்டம்
இதனிடையே நீட் தேர்வுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு தரும் அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டது. டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டு இந்த ஆலோசனைகளை நடத்தி வந்தார்.
மத்திய அரசிடம் ஒப்படைப்பு
தற்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு 2 ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு தரும் அவசர சட்டத்துக்கான வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை இரவு ஒப்படைத்திருக்கிறார். மத்திய சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சகத்தின் கருத்தை கேட்டு முடிவை தெரிவிப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.