பாருங்களேன், இதுலயும் ஆணாதிக்கம்.. கு.க. ஆபரேஷன் செய்வதில் பெண்களே அதிகம்.. அதில் தமிழகம் முதலிடமாம்
டெல்லி: இந்தியாவில் பெண்கள் அதிகளவில் கருத்தடை செய்து கொள்ளும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு அமைப்பு ( என்.எப்.ஹெச்.எஸ் - 4) சமீபத்தில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில், தமிழகத்தில் மட்டும் 2015 -16ம் ஆண்டில் 49.4% பெண்கள் கருத்தடை (குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்) செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
ஆனால், இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இதுவரை இந்த 2015 -16ம் ஆண்டில் ஆண்கள் யாரும் கருத்தடை சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல் இல்லை என்பது தான்.
தமிழகத்தில்...
2005 -06ம் ஆண்டில் தமிழகத்தில் ஆண்கள் 0.4 சதவீதம் என்ற அளவில் கருத்தடை செய்து கொண்டுள்ளனர். ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது, அது முழுமையாக இல்லாமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற மாநிலங்களில்...
மற்ற மாநிலங்களைப் பார்க்கும் போது, கர்நாடகாவில் 2005 -2006ம் ஆண்டுவாக்கில் 0.2 சதவீதமாக இருந்த ஆண்கள் கருத்தடை செய்து கொண்ட விகிதம், தற்போது 0.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மேற்குவங்கத்தில் 0.8 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாகவும், பீகாரில் 0.6 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாகவும் ஆகியுள்ளது.
ஆண்கள் முன்வருவதில்லை...
இது தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த நோ ஸ்கால்பெல் வேசெக்டமி புரோகிராமின் தலைவரான கோவிந்தராஜன் கூறுகையில், ‘கருத்தடை செய்து கொள்ள ஆண்கள் முன்வருவதில்லை.
விழிப்புணர்வு இல்லை...
பெண்களுக்கான கருத்தடையை விட ஆண்களுக்கானது எளிது என எடுத்துக் கூறினாலும், ஆண்களும், அவரது குடும்பத்தாரும் கருத்தடை குறித்து பெரிதும் கவலைப்படுவதே இதற்குக் காரணம்' என்கிறார்.
சமுதாயமும் காரணம்...
சமுதாயத்தில் கருத்தடை என்பது பெண்கள் மட்டுமே செய்து கொள்ள வேண்டும் என்ற பரவலான கருத்து நிலவுவதே இதற்குக் காரணம் என மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனைவிகளின் தியாகம்...
சமயங்களில் ஆண்களே இதற்கு சம்மதம் தெரிவித்தால் கூட, இடையில் அவர்களது மனைவிகள் புகுந்து கணவருக்குப் பதில் தாங்களே கருத்தடை செய்து கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்பத்தலைவிகள்...
காரணம் ஆண்கள் பணி நிமித்தம் வெளியில் செல்ல வேண்டியவர்கள், பெண்கள் குடும்பத் தலைவிகளாக வீட்டில் இருப்பவர்கள் என்ற கருத்து நிலவுவதே எனக் கூறப்படுகிறது.
ஆண்களுக்குத்தான் எளிது..
உண்மையில் பெண்களை விட ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதே எளிதானது. ஆனால் அதுதொடர்பாக நிலவும் சில மூட நம்பிக்கைகளால் ஆண்கள் ஆபரேஷன் செய்து கொள்ள முன்வருவதில்லை.