செம்மரம் வெட்டச்சென்ற தமிழர்கள் கைது: அரைநிர்வாணமாக ஆந்திரா சிறையில் சித்ரவதை
திருப்பதியில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் அரை நிர்வாணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடப்பா: ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் அரை நிர்வாணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர போலீசார் சித்தரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 13 தேதி கடப்பா மாவட்டத்தில் இருந்து சித்தூருக்கு 3 பேருந்துகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்த போது பலாப்பள்ளி சோதனைச்சாவடி அருகே ஆந்திர போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது தப்பியோடிய தமிழர்கள் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிப்பட்ட தமிழர்கள் ரயில்வே கூடுர் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆந்திர போலீசார் அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிடிப்பட்ட தமிழர்களிடம் எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து ஆந்திர போலீசார் கூற மறுத்துவிட்டனர்.
இதனிடையே குறுகிய அறையில் அடைத்து ஆந்திர போலீசார் சித்தரவதை செய்வதாக தமிழர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செம்மரங்களை வெட்ட வந்ததற்கு ஆதரமில்லாதாக நிலையில் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் தமிழக கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.