4 மாத இழுபறி முடிவு- தமிழக காங். தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்- இளங்கோவன் வாழ்த்து!!
டெல்லி: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில்தான் வென்றது. இதையடுத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை ஏற்ற காங்கிரஸ் மேலிடம் உடனடியாக புதிய தலைவரை நியமிக்கவில்லை. இதனால் 4 மாதங்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி காலியாக இருந்தது.
9 பேர் போட்டி
இந்த பதவிக்கு திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட 9 பேர் போட்டி போட்டனர். ஒவ்வொருவரையும் காங்கிரஸ் மேலிடம் அழைத்து ஆலோசனை நடத்தி வந்தது.
திருநாவுக்கரசர் நியமனம்
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்த்தன துவிவேதி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இளங்கோவன் வாழ்த்து
புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசன், தம்மை நியமித்த காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். திருநாவுக்கரசருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மாஜி தலைவர் இளங்கோவன், அனைவரையும் அவர் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்று எதிர்ப்பு
திருநாவுக்கரசை தலைவராக நியமிக்கக் கூடாது என ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் மேலிடத்துக்கு ஏற்கனவே கூட்டாக கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.