சட்ட விரோத பாலினச் சோதனை நிலையங்களைக் கண்டறிய "007"களை நியமிக்கும் பஞ்சாப்!
சண்டிகர்: பஞ்சாப்பில் அதிகரித்து வருகின்ற பெண் சிசுக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனியார் ஸ்கேன் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க தனியார் துப்பறியும் நிறுவனங்களை நாடியுள்ளது அம்மாநில அரசு.
பஞ்சாப்பில் செயல்பட்டு வருகின்ற பல்வேறு தனியார் ஸ்கேன் நிறுவனங்களிலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறியும் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சரான சுர்ஜித் ஜெயனி, சட்ட விரோதமாக பாலினம் கண்டறியும் சோதனைகளைக் கண்டறிந்து தடை செய்யும் வகையில் துப்பறியும் நிறுவனங்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.
மேலும், அனைத்து மருத்துவமனை உயர்மட்ட மருத்துவர்களும் அந்தந்த மருத்துவமனை சார்ந்த ஸ்கேன் சென்டர்களைக் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அம்மாநிலத்தில் கடந்த 2001ல் 798 ஆக இருந்த ஆண்-பெண் விகிதாச்சாரம் 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 846ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்தே பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற தவறான செயல்களை கண்டறிந்து தடுக்க பஞ்சாப் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
மேலும், சட்ட விரோத பாலின சோதனை நிலையங்களைப் பற்றி துப்பு கொடுப்போருக்கான சன்மானத்தையும் 1 லட்ச ரூபாயிலிருந்து, ரூ.2,00,00 ஆக உயர்த்தியுள்ளது பஞ்சாப் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.