ஜெ.வுக்கு எதிராக வாதாடியே கோடீஸ்வரரான கர்நாடக அரசு வக்கீல் அதிரடி ஆச்சார்யா!
பெங்களூரு: எம்.ஜி.ஆரால் வாழ்ந்தவர்கள் பலர். ஜெயலலிதாவால் வீழ்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அவரால் வாழ்ந்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார் ஒருவர். அவர்தான் கர்நாடக அரசு வக்கீல் பி.வி. ஆச்சார்யா!
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அவருக்கு சம்பளமாக மட்டும் ரூ. 1.06 கோடி அளவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் வாதாடி வந்தவர் பி.வி.ஆச்சார்யா. ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை கிடைக்க முக்கியக் காரணமே இவரது வாதம்தான்.
ஜெயலலிதா - சசிகலா தரப்பு ஜவ்விழு இழுத்து வாய்தா மேல் வாய்தா போட்டு அலைக்கழித்தபோதும் அசராமல் நின்று விளையாடியவர் ஆச்சார்யா. இவரது வாதத் திறமையின் காரணமாக கீழ் கோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் தலையெழுத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆர்டிஐ மூலம்
கர்நாடகத்தைச் சேர்ந்த ஆர்டிஐ சேவகர் டி. நரசிம்மமூர்த்தி என்பவர் சொத்துக் குவிப்பு வழக்கில் யாருக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட்டது என்பது குறித்து ஆர்டிஐ மூலமாக கர்நாடக அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் கேட்டிருந்தார்.
ரூ. 1,06,86,018
இதற்கு அட்வகேட் ஜெனரல் அலுவலகம் அளித்துள்ள பதிலில் கர்நாடக அரசு வழக்கறிஞராக வாதாடிய பி.வி. ஆச்சார்யாவுக்கு சம்பளமாக 1 கோடியே 6 லட்சத்து 86 ஆயிரத்து 18 ரூபாய் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் மொத்த செலவு
இந்த வழக்கில் கர்நாடக அரசு செய்த செலவாக 2 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 888 ரூபாய் என்றும் அட்வகேட் ஜெனரல் அலுவலகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசிடமிருந்து வசூல்
இந்தத் தொகை அனைத்தையும் தமிழக அரசிடமிருந்து கர்நாடக அரசு வசூலிக்கவுள்ளது. காரணம், இந்த வழக்கை தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு உச்சநீதிமன்றம் மாற்றியபோது, ஆகும் செலவு அனைத்தையும் தமிழக அரசே தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.