இணையம் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க செயல்பாடுகள்... கண்காணிக்க சிறப்பு குழுவை அமைக்கும் கேரளா
திருவனந்தபுரம்: இணையம் மூலமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சிறப்பு குழுவை அமைக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தொடர்பான பிரசுரங்கள், வீடியோ காட்சிகள் அதிகம் பகிர்ந்து கொள்ளப்படும் மாநிலம் என்பதால் ஒரு சிறப்பு குழுவை அமைக்க கேரளா அரசு முடிவு செய்திருப்பதாக நமது ஒன் இந்தியாவுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குழுவில் இடம்பெறும் அதிகாரிகள் இணையம் மூலமான ஜிகாதிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும். கடந்த ஓராண்டு காலமாக கேரளா இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்காக ஒரு குழு தேவை என கருதி வந்தது கேரளா போலீஸ். அண்மையில் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த பல இளைஞர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
இந்த சந்தேக நபர்களை மிக உன்னிப்பாக தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு கண்காணிக்க உள்ளது. மேலும் வாட்ஸ் அப்பிலும் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு குழு ஒன்று இயங்கி வருவதையும் கேரளா போலீசார் அண்மையில் கண்டுபிடித்தனர். அதுவும் அந்த குழுவில் உள்ள ஒரு நபரே தகவலை தெரிவித்ததன் அடிப்படையில் இதுவும் அம்பலமானது.
தற்போது கேரளா அரசு அமைத்துள்ள சிறப்புக் குழுவானது உளவுத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும். உளவுத்துறையும் இதுபோன்ற கண்காணிப்புகளை மேற்கொண்டாலும் சிறப்புக் குழு ஜிகாதிகள் தொடர்பான விவகாரங்களை மட்டும் கண்காணிக்கும்.
அதேபோல் கேரளாவில் கடந்த சில மாதங்களாக காணாமல் போன இளைஞர்களை தேடும் பணியையும் இக்குழு மேற்கொள்ளும்.