திருப்பதியில் பிரம்மோத்ஸவம் இன்று தொடக்கம்... பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகள்
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோத்ஸவம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்தாண்டுக்கான பிரம்மோத்ஸவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி, நேற்று மாலை முளைவிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமலையில் உள்ள நந்தவனத்திலிருந்து புற்று மண் எடுத்து வந்து, அதில் நவதானியங்களை விதைத்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இன்று மாலை கொடியேற்றத்துக்குப் பிறகு, இரவு பெரிய சேஷவாகனத்திலும், 17-ஆம் தேதி காலை சின்னசேஷ வாகனத்திலும், இரவு அன்னப்பறவை வாகனத்திலும், 18-ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பந்தல் வாகனத்திலும், 19-ஆம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு ஸர்வ பூபால வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார்.
20-ஆம் தேதி காலை மோகினி அவதாரமும், இரவு கருடசேவையும் நடக்கிறது. 21-ஆம் தேதி காலை அனுமந்த வாகனத்திலும், இரவு கஜ வாகனத்திலும், 22-ஆம் தேதி காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து 23-ஆம் தேதி காலை மகா தேரோட்டமும், 24-ஆம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.