திருப்பதியில் இன்று கருடசேவை... ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருமலைக்கு வருகை
திருப்பதி : திருமலையில் பிரம்மோற்சவத்தின் 5-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருடசேவை நடைபெறுகிறது. இதில் மலையப்பசாமி கருடவாகனத்தில் மாடவீதிகளில் பவனி வருகிறார்.
கருடசேவை நாளில் அணிவிப்பதற்காக தமிழகத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிகொண்டிருக்கும் ஆண்டாள் அணிவிக்கும் மாலை வெங்கடாசலபதிக்கும் உற்சவர் மலையப்பசாமிக்கும் அணிவிக்கப்படும்.
அதன்படி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் மற்றும் கிளிகளை தமிழக அறநிலையத்துறை சார்பில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், ரமேஷ், கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் திருமலைக்கு கொண்டு வந்தனர். அவற்றை அவர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
இந்த மாலைகள் மற்றும் கிளிகள் இன்று திருமலை ஏழுமலையான் கோவிலில் மூலவர் வெங்கடாசலபதிக்கும், கருடவாகனத்தில் இன்று இரவு பவனி வரும் உற்சவர் மலையப்பசாமிக்கும் அணிவிக்கப்படுகிறது.
இதேபோல் இந்து தர்மசமிதி சார்பில் பிரம்மோற்சவத்தையொட்டி 11-வது ஆண்டாக 9 வெண்பட்டுக்குடைகள் காணிக்கையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை அந்த அமைப்பின் அறங்காவலர் குழு தலைவர் ஆர்.ஆர்.கோபால் மற்றும் சமிதி தொண்டர்கள் ஏழுமலையான் கோவில் முன்பு நடந்த நிகழ்ச்சியில் வழங்கினர்.