மத்திய அரசைக் கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. 10 யூனியன்கள் பங்கேற்பு!
டெல்லி: மத்திய அரசைக் கண்டித்து 10 தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை (செப்.2) நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 18 கோடி ஊழியர்களும், 6 லட்சம் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். இதுதவிர, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
எனவே தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்க வாய்ப்புள்ளது.
எதற்காக பந்த்?
பொது விநியோக முறையை வலுப்படுத்தி அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்
வேலைவாய்ப்பை அதிகரிக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்
தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்
-போன்றவை உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அரசிடம் ஏ.ஐ.டியு.சி., சி.ஐ.டி.யு, பாஜக சார்பு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, பாரதிய மஸ்தூர் சங்கத்திடம் (பி.எம்.எஸ்.) மட்டும் மத்திய அரசு கடந்த மாதம் 16-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தப் போராட்ட முடிவைக் கைவிடுவதாக பி.எம்.எஸ். தன்னிச்சையாக அறிவித்தது.
இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு மற்ற தொழிற்சங்கங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த வேண்டுகோளை ஏற்க இதர தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன. எனவே அறிவித்தபடி, நாடு முழுவதும் வெள்ளிக்கிழமையன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, பிகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் வரை வங்கி, காப்பீடு, தபால், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேரணி செல்கின்றனர்.
இதனிடையே, மத்திய தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.