பழைய 500 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாள் !
பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாளாகும்
டெல்லி: பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இனிமேல் தங்கள் கைவசம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டும் மார்ச் 31 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம்.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு, முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஒருவர் மீண்டும், மீண்டும் வருவதைத் தடுக்க விரலில் அடையாள 'மை' வைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
வங்கிகளில் பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சாதாரண மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். நோட்டு செல்லாது அறிவிக்கப்பட்ட நாளிலில் இருந்து பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் பூட்டியநிலையிலேயே காட்சி அளிக்கின்றன. இதனால் பணம் எடுக்க ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் வங்கியில் கால்கடுக்க காத்துக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வங்கிகளில் போதிய பணம் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவிலான பணமே வழங்கப்பட்டது. இதனிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் 50 நாட்கள் ஆகியும் பணத் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில் ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு பிறகும் பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால், அதை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிளைகளில் மட்டும் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிட்டு 50 நாட்கள் ஆகியும் இதுவரை இப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை என்பதே பெரும்பாலேனார் குற்றச்சாட்டாக உள்ளது.