கர்நாடகத்தில் பரபரப்பு.... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே ராஜினாமா செய்தார் எடியூரப்பா
கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராக நீடிப்பாரா என்பது குறித்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரிய வரும்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
கர்நாடகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் 104 இடங்களை பெற்ற பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து உரிமை கோரியது.
அதுபோல் காங்கிரஸ்- ஜேடிஎஸ் 115 எம்எல்ஏக்களுடன் குமாரசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எனினும் ஆளுநரோ எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
எடியூரப்பாவுக்கு பதவியேற்பு
ஆளுநர் அழைத்ததன் பேரில் எடியூரப்பா வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் கால அவகாசம் கொடுத்தார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆனால் இன்று மாலை 4 மணிக்குள் சட்டசபையில் கர்நாடக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா அரசு தயாராகி வந்தது.
சட்டங்கள்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சில விதிமுறைகளையும் நீதிமன்றம் வெளியிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடத்தக் கூடாது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.
எடியூரப்பா நம்பிக்கை
8 எம்எல்ஏக்கள் இருந்தால் பாஜகவின் ஆட்சி தப்பும் என்ற நிலையில் அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக 100 சதவீத வெற்றி பெறும் என்று எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் போதிய எண்ணிக்கை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே, முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார்.