மினி இட்லி, பொடி இட்லி, தட்டு இட்லி... கையில் எடு.. வாயில் போடு.. சுவைத்து மகிழ்! #worldidlyday
இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது
Recommended Video
டெல்லி: இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியமான சிற்றுண்டியான இட்லியின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 30ம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
தாய்ப்பாலுக்கு அடுத்ததாக பச்சிளம் குழந்தைகளுக்கு பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு இட்லி தான். காரணம் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவாக அது கருதப்படுகிறது. அதோடு, வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் உணவாக இட்லி உள்ளது. அதற்குக் காரணம் அது எளிதில் ஜீரணமடையக்கூடியது என்பது தான்.
இட்லியானது அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தேவையான அளவு ஊற வைத்து, பக்குவமாக மாவாக அரைத்து, அதனை தேவையான அளவு புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது.
இட்லி தினம்:
இந்நிலையில், கடந்த, 2015ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 30ம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. 'இட்லி கிங்' என்ற பெயரில் அறியப்படும் சென்னையை சேர்ந்த இனியவனும், தமிழக கேட்டரிங் ஊழியர்கள் சங்க தலைவர் ராஜாமணி அய்யரும் சேர்ந்து இந்த இட்லி தினத்தை அறிமுகப்படுத்தினர்.
இட்லிக் கொப்பரைகள்:
ஆரம்ப காலத்தில் மண் பானையின் மீது நூலைக் கட்டி அதில் இட்லி ஊற்றி சுட்டிருக்கிறார்கள். பின் காலத்திற்கு ஏற்ப அதன் வடிவம் மாறி, தற்போது அதற்கென பிரத்யேக இட்லி கொப்பரைகள், குக்கர்கள் வந்து விட்டன.
சட்னி, சாம்பார்:
தற்போது இதில் மக்களின் சுவைக்கு ஏற்ப வேறு சில மாவுகள் மற்றும் காய்கறிக் கலவைகள் சேர்க்கப்பட்டு விதவிதமான இட்லிகள் உருவாக்கப்படுகின்றன. இட்லிக்கு மிகச் சிறந்த இணை பிரியா துணையாக இன்றளவும் சட்னி, சாம்பார் தான் உள்ளது.
மினி இட்லி டூ மெகா இட்லி:
இட்லி என்றால் வட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல், மினி இட்லி, தட்டு இட்லி, டம்ளர் இட்லி, பொடி இட்லி, பொம்மை வடிவ இட்லி என விதவிதமான இட்லிகள் கடைகளில் கிடைக்கின்றன. பிரியாணியைப் போலவே இட்லிக்கென்றே பல பிரத்யேக கடைகள் இருப்பதே இட்லி பிரியர்கள் எந்தளவுக்கு உள்ளனர் என்பது சாட்சி.
இட்லியின் வரலாறு:
தென்னிந்தியர்களின் பிரியமான காலை உணவாக உள்ள இட்லிக்கு பல வரலாற்றுப் பின்னணி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான உணவு என்கிறார்கள் வரலாறு தெரிந்தவர்கள்.
குஜராத் உணவு?
கி.பி., 1130ல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நுாலில் இட்லி குறித்து கூறப்பட்டுள்ளதாகவும், பத்து மற்றும், 12ம் நுாற்றாண்டுக்கும் இடையே தென்னிந்தியா வந்த சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, இட்லியை கொண்டு வந்துள்ளதாகவும் குஜராத்தி வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 'இட்டா' என்ற பெயரில் உளுந்துப்பருப்பும், அரிசியும் சேர்த்து ஆவியில் வேக வைத்து தயார் செய்யும் உணவு, குஜராத்தில் உருவானது என்ற வாதமும் உள்ளது. உணவு வரலாற்றாசிரியர் அசயா, ‘இட்லியின் தாயகம் இந்தோனேஷியா' என்கிறார்.
இட்லி சாப்பிடுவோம்:
உலக சுகாதார அமைப்பும் உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆரோக்கியமான, எளிய உணவான இட்லியை சாப்பிட்டு, நாமும் இட்லி தினத்தை கொண்டாடுவோம்.