குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு காரணமே செல்போன்கள்தானாம்.. சொல்கிறார் உ.பி அமைச்சர் ஆசாம்கான்
லக்னோ: குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதற்கு முக்கிய காரணம் மொபைல் போன்களே என்று உத்தரபிரதேச அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம்கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு மொபைல் போன்களே காரணமாக உள்ளது. டெல்லியில் கடந்த வாரம் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இரண்டரை வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது.
நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மொபைல் போன்கள் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. மொபைல் போன்கள் மூலம் ஆபாச படங்கள் எளிதாக கிடைப்பதால் தான் இரண்டரை வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்கள் கூட எதையும் டவுன்லோட் செய்கின்றனர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களும் எளிதாக கிடைக்கிறது. எளிதாக கிடைக்கும் ஆபாச படங்களால் இளைஞர் சமுதாயம் சீரழிந்து போகிறது.
ஆபாச படங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது இதுவரை என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர் பலாத்காரம் செய்தாலும் கூட நான்கு பேரின் பெயர்களை புகாரில் சேர்க்கிறார்கள். நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக குறிப்பிடுகிறார்கள். அது எப்படி நடக்க முடியும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.
ஒருவர் பலாத்காரம் செய்திருக்கலாம். மற்றவர்கள் வேடிக்கை பார்த்திருக்கலாம். இப்படி நடக்கத்தான் வாய்ப்புள்ளது. பலாத்கார சம்பவத்தில் சிக்கியவர்கள் நான்கு சகோதரர்கள் இருந்தால் நான்கு பேரையும் குற்றவாளிகளாக்கி விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.