பிரவீண் தொகாடியா உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைய தடை!!
உடுப்பி: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுப்பி அருகேயுள்ள குஞ்சினபெட்டுவில் வருகிற 9-ந் தேதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பாக 'வீரமிகு இந்து மாநாடு', பேரணி நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பிரவீண் தொகாடியா உட்பட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள், மடாதிபதிகள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரவீண் தொகாடியா உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை கூறுகையில், கடலோர கர்நாடகத்தில் இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்படும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த சூழலில் பிரவீண் தொகாடியா உடுப்பி நிகழ்ச்சியில் பங்கேற்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே மார்ச் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உடுப்பி மாவட்டத்துக்குள் அவர் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
அனுமதியின்றி நுழைந்தாலோ,கூட்டத்தில் கலந்து கொண்டாலோ அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரவீண் தொகாடியாவின் பேச்சை ஒளிபரப்பவும் கருத்துகளை சிடி வாயிலாக விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.