ராமர் கோவில்.... பாஜகவும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்: பிரவீன் தொகாடியா பாய்ச்சல்
பிரதமர் மோடியை தொகாடியாக கடுமையாக சாடியுள்ளார்.
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பாஜகவும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர் என விஎச்பி-ல் இருந்து வெளியேறி புதிய இந்துத்துவா இயக்கத்தை உருவாக்கிய பிரவீன் தொகாடியா சாடியுள்ளார்.
விசுவ இந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியாக அண்மையில் சர்வதேச இந்து பரிஷத் என்ற தனி அமைப்பை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று அயோத்திக்கு வருகை தந்தார் தொகாடியா.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டத்தை அக்டோபருக்குள் நிறைவேற்ற வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால் அதை எப்படி சாதிப்பது என்பது குறித்து மாற்று வழிகளை ஆராய்வோம். ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் 10 கோடி கையெழுத்துகள் பெறப்படும்.
வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கிருக்கும் மசூதிகளுக்கு செல்கிறார், ஆனால் அயோத்திக்கு ஒருபோதும் வருவதில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவும் பிரதமர் மோடியும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.
இவ்வாறு பிரவீன் தொகாடியா கூறினார்.