"மந்திரியாரே இதுக்கெல்லாமுமா ஐடி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்....??"
டெல்லி: வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது வங்கிக் கணக்கு விவரம், வெளிநாடு பயணம் சென்ற விவரம் உள்ளிட்டவற்றையும் சொல்ல வேண்டும் என்ற புதிய விதிமுறையைக் கிண்டலடித்து பிரபல கார்ட்டூனிஸ்ட் அஜீத் நைனன் போட்டுள்ள கார்ட்டூன் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் (அதிலும் இந்த மாதாந்திர சம்பளம் வாங்குவோர் இந்த வருமான வரித் துறையினரிடம் சிக்கி சின்னாபின்னமாவது குறித்து பல கட்டுரைகளை வடிக்கலாம்.. அவ்வளவு சோகமானது அந்தக் கதை) இந்த ஆண்டு முதல் சில புதிய தகவல்களையும் தங்களது ரிட்டரன் படிவத்தில் தெரிவிக்க வேண்டும் என வருமானவரித்துறை கூறியுள்ளது.
Today's toon by Jug & Ninan 😛 pic.twitter.com/RZinVr0SH3
— Times of India (@timesofindia) April 19, 2015
அதன்படி தாங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த விவரம், வங்கியில் பணம் எவ்வளவு கையிருப்பு உள்ளது. வங்கிக் கணக்கை முடித்து விட்டால் அதுகுறித்த விவரம், வெளிநாடு பயணம் சென்றது தொடர்பான விவரம் உள்ளிட்டவற்றையும் கொடுக்க வேண்டுமாம்.
இதை வைத்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட் அஜீத் நைனன் கிண்டலடித்து ஒரு கார்ட்டூன் போட்டுள்ளார்.
அதில் இப்படி இருக்கிறது...
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கிறார். பிரதமர் மோடி செம டென்ஷனாக ஜேட்லியிடம் வந்து பல ஆவணங்களைக் காட்டுகிறார். அதைப் பார்த்து ஜெர்க் ஆகும் ஜேட்லி இப்படி கூறுகிறார்...
"புதிய ஐடி விதிமுறைப்படி அனைத்து வெளிநாட்டு சொத்துக்கள் குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் வெளிநாடுகளுக்குப் போகும்போது அங்கு உலகத் தலைவர்களிடம் நீங்கள் வாங்கிய ஆட்டோகிராப் விவரத்தையெல்லாம் தெரிவிக்க வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று கூறுகிறாராம் ஜேட்லி.
எப்போது பார்த்தாலும் வெளிநாட்டிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார் மோடி என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடித்துக் கொண்டுள்ளன. அதை வைத்து இப்படி வாரியுள்ளார் நைனன் என்பது குறிப்பிடத்தக்கது.