கழிவறையில் இருந்து வெளியான துர்நாற்றம்.. நொந்துபோன விமானி.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தின் கழிவறையில் இருந்து திடீரென பயங்கர துர்நாற்றம் வீசியதால் பயணிகள் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
ஹைதராபாத்: பெங்களூரிலிருந்து சென்ற விமானத்தின் கழிவறையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் நொந்துபோன விமானி அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். விமானம் திடீரென தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பைஸ்ஜெட்டிற்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானம் நேற்று பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இதில் நான்கு குழந்தைகள் உள்பட 188 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
விமானம் ஹைதராபாத் அருகே நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கழிவறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இந்த துர்நாற்றம் விமானிகளின் காக்பிட் அறைக்கும் சென்றது.
இதனால் விமானியால் தொடர்ந்து விமானத்தை ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டது. துர்நாற்றத்தால் நொந்துபோன விமானி விமானத்தை அவசர அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கினார்.
அங்கு கழிவறை நன்றாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் காக்பிட்டில் சூழ்ந்திருந்த துர்நாற்றம் விலகியதும் சுமார் அரைமணி நேரம் கழித்து விமானம் ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது.
கழிவறை துர்நாற்றத்தால் விமானம் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.