ஐயா எசமான்.. கழிப்பறையை காணோம்.. மத்திய பிரதேசத்தில் ஒரு வடிவேலு பாணி காமெடி!
சென்னை: காண்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு இந்தியர், ஒரு சீனர், ஒரு ஜப்பானியர் ஆகிய மூவரும் விருந்து ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். அப்போது காண்டிராக்ட் தொழிலில் கிடைக்கும் லாபம் பற்றி பேச்சு எழுந்தது. உடனே ஜப்பானியர், ''குறைந்தது 20% லாபம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்வேன். அதற்கேற்றபடி டெக்னாலஜியை யூஸ் பண்ணுவேன்'' என்றார். சீன காண்டிராக்டர், ''முடிந்தவரை லோக்கல் பொருட்களை பயன்படுத்தி 30% லாபம் வர்ர மாதிரி பார்த்துக் கொள்வேன்'' என்றார்.
இருவரது பேச்சையும் கேட்ட இந்திய காண்டிராக்டர் குலுங்கி குலுங்கிச் சிரித்தாராம். ''நீங்கள் இருவரும் காண்டிராக்ட் தொழிலுக்கே லாயக்கற்றவர்கள். 20%, 30% லாபமெல்லாம் எந்த மூலைக்கு? நானெல்லாம் 100% லாபம் பார்க்கிறேனாக்கும்'' என சொல்ல, ஷாக்கான மற்ற இருவரும் 'எப்படி?' என கேள்வியெழுப்பினர். கொஞ்சமும் அசராத இந்திய காண்டிராக்டர், ''பாலம், ரோடு, கட்டடம்.., எதுவானாலும் சரி. எல்லாமே பேப்பரில் இருக்கும். நிஜத்தில் எதுவுமே இருக்காது. ஆனால் பில் மட்டும் கரெக்டா பாஸாகிடும்'' என சொல்ல இருவரும் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களாம்.
காமெடிக்காக சொல்லப்பட்ட இந்த கதை நிஜமாகவே அரங்கேறியிருக்கிறது. எங்கே தெரியுமா? எல்லாம் நம்ம இந்திய தேசத்தில், மத்தியபிரதேச
மாநிலத்தில்தான் இந்த கூத்து நடந்திருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்!
கடந்த 2014ம் ஆண்டு மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சகட்டுமேனிக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது ஞாபகம் இருக்கா! அதில் ஒன்றுதான் 'ஸ்வச் பாரத்' எனப்படும் தூய்மை இந்தியா திட்டம்.
இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் இது பற்றி விளம்பரங்கள் செய்யப்பட்டன. ''அரே பொது இடங்களை அசிங்கப்படுத்தாதே!'' என டிவி விளம்பரங்களில் தோன்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கினார். நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் 'ஸ்வச் பாரத் திட்டம்' தன்னிறைவு பெற்றுவிட்டது. எல்லா இடங்களிலும் கழிவறைகள் கட்டப்பட்டுவிட்டன என வழக்கம்போல தம்பட்டம் அடித்தது மத்திய அரசு.
ஆனால் நிஜத்தில் என்ன நடந்திருக்கிறது தெரியுமா?
ஒரு படத்தில் 'கிணற்றை காணவில்லை' என வடிவேலு போலீசிடம் புகார் கொடுப்பாரல்லவா... கிட்டத்தட்ட அதே கதைதான். ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அப்போதைய பா.ஜ.க அரசு, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அதிகம் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகளில் அரசு சார்பில் இலவச கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கியது. ஒரு கோடியல்ல, 10 கோடியல்ல, இதற்காக மொத்தம் ரூ. 540 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணத்தில் மொத்தம் நாலரை லட்சம் கழிப்பறைகள் கட்டப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதே எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2018-லேயே இப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பொது கழிப்பறைகளின் தற்போதைய நிலைமை எப்படியிருக்கிறது, முறைப்படி சுத்தம் செய்யப்படுகிறதா, பொதுமக்கள் அவற்றை முறையாக
பயன்படுத்துகிறார்களா? என்பது பற்றி விசாரிக்க ஒரு ஆய்வுக்குழு சம்மந்தப்பட்ட இடங்களுக்கு அண்மையில் விசிட் அடித்தது.
''உங்க ஊரு பொது கழிப்பறை நல்ல முறையில் செயல்படுகிறதா?' என ஆய்வுக் குழுவினர் உள்ளூர் மக்களிடம் கேட்க, 'பொது கழிப்பறையா...எங்க ஊரிலா?' என அவர்கள் எதிர்க் கேள்வி கேட்டிருக்காங்க. அதிர்ந்துபோன ஆய்வுக்குழுவினர் ஊர் முழுக்க அகழ்வாராய்ச்சி நடத்தியும் கழிவறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி, ஆனது 'ஆய்' போச்சி, அடுத்த இடத்தில் ஆய்வு செய்வோம் என இன்னொரு இடத்திற்குப் போனால் அங்கேயும் இதே நிலைதான்.
ஒரு இடமல்ல, இரண்டு இடங்களல்ல, மாநிலம் முழுவதும் ஏறத்தாழ நாலரை லட்சம் இடங்களில் ஆய்வு செய்தும் ஒரு இடத்தில் கூட கழிவறையைக் காணோம். அதிர்ந்துபோன ஆய்வுக் குழுவினர் இது பற்றி அரசுக்கு ரிப்போர்ட் அனுப்ப, அது ஊடகங்களில் கசிய, பாஜக அரசின் மெகா கழிப்பறை ஊழல் இப்போது மத்தியபிரதேசம் முழுவதும் நாற்றமெடுக்கத் தொடங்கியுள்ளது.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா!
கழிப்பறைக்கான அஸ்திவாரம் போடப்பட்டதும் முதற்கட்ட நிதியும், கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு முன் வீட்டு உரிமையாளர் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமர்ப்பித்த பின்னர் அடுத்தகட்ட நிதியும் வழங்கப்பட வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால் இந்த விதிமுறை அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது.
எப்படி என்கிறீர்களா? கழிப்பறை கட்டாமலேயே வேறு வீட்டின் கழிப்பறை முன் நின்று புகைப்படம் எடுத்து நிதி பெற்றது இப்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கிராமவாசிகள் சிலர், தங்கள் பெயரில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது தங்களுக்கே தெரியாது என்று அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அரசிடம் உள்ள ஆவணங்களின்படி 540 கோடி ரூபாய் செலவில் 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் நிஜத்தில் எங்கும் கழிப்பறைகள் இல்லை.
4.5 லட்சம் கழிப்பறைகள் மாயமாகியுள்ள நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 540 கோடி பணம் எங்கே போனது எனும் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இது பற்றி நம்ம ஊரில் காண்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ள சிலரிடம் பேசியபோது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஒருமுறை, அரசின் காண்டிராக்ட் பணிக்கு ஒரு ரூபாய் ஒதுக்கினால் அது பல இடங்களிலும் பங்கு பிரிக்கப்பட்டு கீழ் மட்டத்தில் வேலைக்காக 50 பைசா மட்டுமே செல்கிறது என்று சொன்னார். இப்ப நிலைமை அதைவிட மோசம். அரசாங்க காண்டிராக்ட் எடுக்கணும்னா முதல்ல ஆளுங்கட்சிக்காரங்களுக்கு அட்வான்ஸ் தரணும். பிறகு அவங்க மூலம் சம்மந்தப்பட்ட அமைச்சரைப் பார்க்கணும். வேலைக்குத் தக்கபடி அவருக்கும் செமத்தியா அழணும். அதன்பிறகு அதிகார மட்டத்தில் மேல இருந்து கீழே வரைக்கும் பதவிக்குத் தக்கபடி படியளக்கணும். அப்பதான் காண்டிராக்ட் கைக்குக் கிடைக்கும். வேலை முடிஞ்ச பிறகு பில் பாஸ் பண்ணவும் லஞ்சம் கொடுக்கணும். அங்கே இங்கேண்ணு கொடுத்தது போக மீதியை வெச்சுத்தான் வேலையை செய்யணும். அதோட எங்க லாபத்தையும்ம் பார்த்துக்கணும்.
சொன்னா நம்பறதுக்குக் கஷ்டமா இருக்கும். ஒருசில வேலைகளில் பலத்த நஷ்டம் ஏற்படும். தொடர்ந்து வேலை கிடைக்கணும்கிறதுக்காக அதை பொறுத்துக்கொள்வோம். அந்த மாதிரியான சமயங்களில் அதிகாரிகள் துணையோடு சில அட்ஜெஸ்ட்மெண்டுகளை செய்வோம். எங்கேயாவது கண்காணாத இடத்தில் ரோடு போட்டதாகவோ, பாலம் போட்டதாகவோ பேப்பரை ரெடி பண்ணி பில் பாஸ் பண்ணி முந்தைய நட்டத்தை ஈடு செய்வோம். இதெல்லாம் காண்டிராக்ட் தொழிலில் சகஜம். ஆனா அதேநேரம் மத்திய பிரதேசத்தில் நடந்த மாதிரி மொத்தமா ஆட்டய போடற கதையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது என்றனர்.
அநியாயம் செய்வதிலும் ஒரு குறைந்தபட்ச நியாய தர்மத்தைக் கடைபிடிக்கிறார்களே.... அங்கேதான் நிற்கிறார்கள் நம்ம தமிழ் காண்டிராக்டர்கள் (நீங்க உண்மையான தமிழனா இருந்தா இந்த ஸ்டோரியை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க!!!)
- கௌதம்