உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா.. பாகிஸ்தான் மீது இந்தியாவின் தக்காளி தாக்கு!
டெல்லி: உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி போல நினைக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கு ஒட்டுமொத்தமாக தக்காளி ஏற்றுமதி செய்வதையே நிறுத்திவிட்டனர் நம் ஆட்கள்!
ஜம்மு-காஷ்மிரின் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர செயலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்- இ-முகமது இருப்பது தெரியவந்தது.
இந்த அதிர்ச்சியிலிருந்து இந்திய மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. தங்களால் ஆன உதவிகளை வீரர்களின் குடும்பத்துக்கு செய்து வருகின்றனர். மற்றொரு புறம் பாகிஸ்தான் மீதான எதிர்ப்புகளை பல விதத்தில் ஒவ்வொருவரும் காட்ட முனைந்து வருகின்றனர்.
எதிர்ப்பு
அதன்படி, விவசாயிகளும் தங்கள் பங்கு எதிர்ப்பை பாகிஸ்தானுக்கு தெரிவித்திருக்கிறார்கள். குடிக்கிற தண்ணியில இருந்து எதுவுமே பாகிஸ்தானுக்கு அனுப்புவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தக்காளியை நிறுத்திவிட்டனர்.
ஒரு கிலோ ரூ.250
குறிப்பாக டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள்தான் இந்த அதிரடியை காட்டியிருக்கிறார்கள். கடைசியில விளைவு என்ன தெரியுமா? அந்த நாட்டில், தக்காளி வரத்து மொத்தமாக குறைந்துபோய், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாயாம்.
விலை ஏறுகிறது
தக்காளி மட்டுமில்லை.. காய்கறிகள் கூட நிறுத்தப்பட்டு விட்டதாம். தினமும் 100 லாரிகளில் இங்கிருந்து விளையும் காய்கறிகளை அந்த நாட்டுக்கு கொண்டு போகப்பட்டிருந்தது. அது மட்டுமில்லை.. மற்ற நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி கிடைத்தாலும் நாம அனுப்பற தக்காளிதான் விலை கம்மியாக இருந்ததாம். ஆனால் இனிமேல் எல்லா காய்கறிகளும் அங்குபோவது நிறுத்தப்பட்டுள்ளது.
மனசு ஆறல
அதன்படி பச்சை மிளகாய் கூட ஒரு கிலோ ரூ. 160-க்கும் விற்கப்படுகிறாம். கத்தரிக்காய், வெண்டைக்காய் எல்லாமே கிலோ 100 ரூபாயை தாண்டிவிட்டதாம். இப்படி ஒரு காய்கறி விலை ஏற்றத்தை அந்த நாடு இதுவரைக்கும் பார்த்திருக்காது. இதை எல்லாம் பண்ணாக்கூட இன்னும் மனசு ஆறல! 40 விலைமதிப்பற்ற உயிர்கள் ஆச்சே!!