நண்பர்கள் தினம்: குஜராத்தில் 3 டன் தக்காளியை வீசி விளையாடி வீணடித்த வாலிபர்கள்: குமுறிய மக்கள்
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் நண்பர்கள் தினத்தையொட்டி தக்காளி திருவிழா நடத்தப்பட்டது உள்ளூர் மக்களை கோபம் அடைய வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தையொட்டி 'லாடொமாட்டினா' என்ற தக்காளி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் சூரத், வதோதரா மற்றும் அருகில் உள்ள வல்லப்வித்யா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்கள் கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் தக்காளி பழங்களை வீசியடித்து விளையாடினர்.
ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்கும்போது இப்படி தக்காளி திருவிழா நடத்தி அதை வீணடித்தது உள்ளூர் மக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் புபேந்திர லகாவாலா உள்ளிட்டோரை கோபம் அடைய செய்துள்ளது.
திருவிழாவில் 3 டன் தக்காளியை வீணடித்துள்ளனர். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.300 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தக்காளியை வீணடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் திருவிழாவில் கலந்து கொண்டவர்களோ நாங்கள் ஜாலிக்காக செய்தோம் இதில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர்.