பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை வெயில் வாட்டுகிறது... மக்கள் அவதி
புவனேஸ்வர்: பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான பானி புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடும் சேதம் ஏற்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை, தற்போது 44 டிகிரி செல்சியஸ் மேல் வெயில் வாட்டி வருகிறது. சாலையில் செல்வோர், முகங்களை மறைத்தவாறு செல்கின்றனர். மதிய வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக, போலங்கீர், டிட்லகர் பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. புவனேஸ்வர், கட்டாக் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. வெப்பத்தின் தாக்கம், அடுத்த திங்கட் கிழமை வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நந்தன்கனன் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் மூவாயிரத்து ஐநூறு விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் வெப்பத்திலிருந்து, சிங்கம், புலி, கரடி, யானை, நீர் யானை உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.