ஜெயந்தி நடராஜன் ராஜினாமா ஏன்? பரபரக்கும் பின்னணி தகவல்கள்
சென்னை: மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்ததன் பின்னணியில் பல பரபரப்பான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
சுற்றுச் சூழல் தனிப் பொறுப்பு அமைச்சராக ஜெயந்தி பதவியேற்றது முதல் அனைத்து கோப்புகளுக்கும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துபோடுவதில்லையாம். இதேபோல்தான் முதலீட்டுகளுக்கான கேபினட் கமிட்டி (Cabinet Committee on Investments) அனுப்பிவைத்த அரைடஜன் சுற்றுச் சூழல் அனுமதி தொடர்பான கோப்புகளுக்கும் ஜெயந்தி நடராஜன் ஒப்புதல் தராமல் வைத்திருந்தாராம்.
இது குறித்து கேபினட் செயலர் அஜித்சேத் பலமுறை ஜெயந்தி நடராஜனுக்கு நினைவூட்டல் கடிதமும் அனுப்பியிருக்கிறார். அந்த கோப்புகளுக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? அப்படி கொடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்திருக்கிறார்.
கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கை
கேபினட் கமிட்டியின் தொந்தரவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில்தான் சுற்றுச் சூழல் அமைச்சகம் வசம் இருந்த மேற்கு தொலைத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாம். இதன் மூலமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுரங்கம், மின் திட்டங்கள் போன்றவை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் கோபமடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் லாபி செய்தே ஜெயந்தியை தூக்கிவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கஸ்தூரி அறிக்கை ஒப்புதல் திடீர் ரத்து!
இதனிடையே திடீரென கஸ்தூரி ரங்கன் அறிக்கைக்கான ஒப்புதலை ரத்து செய்வதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு ஊடகங்களில் வெளியான நாளிலேயேதான் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்தியும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
புகார் போனதா?
அதே நேரத்தில் கிழக்குக் கடற்கரையோர 2 மாநிலங்களில் தனியார் துறைமுக விரிவாக்கத்துக்கு அண்மையில் சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தது. ஆனால் இந்த அனுமதிக்குப் பிந்தைய பேரம் தொடர்பாக பிரதமர் வரை புகார் சென்றதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
பேர விவகாரமா?
மேலும் ஆட்சி முடியப் போகிறதே என்பதற்காக நிலுவையில் உள்ள கோப்புகளை கிளியர் செய்கிறோம் என்று அவசரகோலத்தில் அமைச்சரும் உடனிருந்தோரும் மேற்கொண்ட பேர நடவடிக்கைகளும் பதவிக்கு வேட்டு வைத்திருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி எரிவாயு நிறுவனம்?
நாட்டின் முன்னணி எரிவாயு தொழில் நிறுவனம் ஒன்றுடன் ஏற்பட்ட மோதலே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்ய காரணம் என்றும் கூறப்படுகிறது. நாட்டின் முன்னணி நிறுவனமான அது பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருந்தாலும் எரிவாயு எடுக்கும் தொழில்தான் அதற்கு பொன்முட்டையிடும் வாத்து. இது தொடர்பாகத்தான் அண்மையிலும் கூட பல சர்ச்சைகள் வெடித்தது.
இந்த விவகாரத்தில்தான் ஏற்கெனவே கேபினட் அமைச்சராக இருந்த மூத்த அரசியல் தலைவரே ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் அந்த நிறுவனத்துக்கு வசதியானவர் அந்தப் பொறுப்பை ஏற்று "மிகச் சரியாக" ஒத்துழைப்பும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் திடீரென சுற்றுச் சூழல் பொறுப்பு வைத்திருக்கும் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்ததுடன் அந்த பொறுப்பும் கூட அந்த நிறுவனத்துக்கு 'சரியான ஒத்துழைப்பு" கொடுக்கும் அமைச்சர் வசமே சென்றிருப்பது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
முன்னணி எரிவாயு தொழில்நிறுவனத்துடன் மோதலால் ஜெயந்தி ராஜினாமா? இதுபற்றி விசாரித்ததில், முன்னணி எரிவாயு நிறுவனத்துக்கு சுற்றுச் சூழல் தொடர்பாக அனுமதி கொடுப்பதில் ஜெயந்தி நடராஜன் எதிர்ப்பாக இருந்ததாகவும் அதனாலே அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.