ராஞ்சியில் இந்துவாக வசித்து வந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி
டெல்லி: பாட்னா, மும்பை, வாரனாசி மற்றும் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி தெஹ்சீன் அக்தர் கைது செய்யப்பட்டான். அவன் ராஞ்சியில் நெற்றியில் திலகமிட்டு இந்து போன்று வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து போலீசார் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து மேற்கு வங்க-நேபாள எல்லையில் உள்ள நக்சல்பரி பகுதியில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய நபரான தெஹ்சீன் அக்தர்(24) நேற்று கைது செய்யப்பட்டான். பீகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த அக்தருக்கு கயூர் ஜமால் என்பவர் மூலம் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கலுடன் தொடர்பு ஏற்பட்டது.
அக்தர் 2013ம் ஆண்டு பாட்னாவில் நடந்த குண்டுவெடிப்பில் முக்கிய மூளையாக இருந்தவன். இது தவிர அவன் யாசின் பட்கல் மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதான வாகஸ்ஸுடன் சேர்ந்து மும்பை, வாரனாசி மற்றும் ஹைதராபாத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான். அவன் வங்கதேசத்திற்கு தப்பிச் செல்லும் திட்டத்தில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அக்தர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வந்துள்ளான். அவனுக்கும் தடை செய்யப்பட்ட சிமி இயக்க உறுப்பினரான ஹைதர் அலிக்கும் தொடர்பு இருந்துள்ளது. ராஞ்சியில் இருந்தபோது அக்தர் நெற்றியில் பொட்டு வைத்து இந்து போன்று நடித்து வந்துள்ளான்.
மேலும் அவன் கேரள மற்று கர்நாடக மாநிலங்களிலும் தங்கி இயக்கத்திற்கு இளைஞர்களை சேர்த்துள்ளான். அக்தரின் கைதை அடுத்து இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்க பாகிஸ்தானில் வசிக்கும் பட்கல் சகோதரர்களான ரியாஸ் மற்றும் இக்பால் ஆகியோரில் யாராவது ஒருவர் இங்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.