காதல்வயப்படும் 'அரசியல் பெருசுகள்'.. திக்விஜய்சிங்கின் முன்னோடிகள் யார் யார்?
டெல்லி: லோக்சபா தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் ஒரு பக்கம்.. இந்த அனலைத் தணிக்கும் வகையில் 67 வயது திக்விஜய்சிங்- பெண் நிருபர் அம்ரிதா காதல் விவகாரங்களும் கிளுகிளுப்பூட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமானவர் திக்விஜய்சிங். கடந்த ஆண்டு மனைவியை இழந்தவர். அப்போதே அடுத்த திருமணத்துக்கு தாம் ரெடி என்று அதிரடியாக அறிவித்தவர்.
திக்கின் டார்லிங் அம்ரிதா
அவருக்கு இப்போது ஒரு காதலி இருக்கிறார்.. ராஜ்யசபா டிவியின் செய்தி தொகுப்பாளர் அம்ரிதா ராய்தான் திக்விஜய்சிங்கின் 'டார்லிங்'.. இருவரும் ஏடாகூடாமாக இருக்கும் படங்களை அம்ரிதாவின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து எடுத்து ரிலீஸ் செய்துவிட்டனர்.
இதற்கு முன்னர் திக்விஜய்சிங் - அம்ரிதா ஜோடி போல பேசப்பட்ட சில பிரபலங்களைப் பார்ப்போம்.
'தல' என்.டி. திவாரி
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் என்.டி.திவாரி. திக்விஜய்சிங்குக்கு செம சீனியர். இவரது அரசியல் பாதையைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு "சல்லாப கவர்னர்" என்றாலே சட்டென புரிந்து விடும் அளவுக்கு பிரபலம். ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்து பதவியை பறிகொடுத்தவர் திவாரி. இவரைத்தனது தந்தை என்று உரிமை கோரி 2008ஆம் ஆண்டு ரோஹித் சேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதாவது 1960களிலேயே உஜ்வாலா சர்மா என்ற பெண்ணை தல திவாரி திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற நிலையில் கை கழுவிவிட்டார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் ரோஹித் சேகர். இதை அண்மையில் திவாரியே ஒப்புக் கொண்டார். ஒருவேளை திவாரிதான் திக்விஜய்சிங்கின் ரூட்டுக்கு தலயோ?
என்.டி.ஆர்.- லட்சுமி பார்வதி
1990களில் இந்தியாவையே பரபரக்க வைத்தது என்.டி.ராமாராவ்- லட்சுமி பார்வதி திருமணம். 1993ஆம் ஆண்டு தமது 70 வயதில் தமது வாழ்க்கை வரலாற்றை எழுத வந்த லட்சுமி பார்வதியையே தாம் திருமணம் செய்யப் போகிறேன் என்று அறிவித்தார் என்.டி.ஆர். ஆனால் என்.டி.ஆரின் குடும்பத்தினர் இதுவரை லட்சுமி பார்வதியை ஏற்கவே இல்லை என்பது தனிக்கதை.
சசி தரூர்- சுனந்தா புஷ்கர்
மிக அண்மையில் காதல் விவகாரத்தில் அசிங்கப்பட்டு சர்ச்சையில் சிக்கியவர் மத்திய அமைச்சர் சசி தரூர். இவரது காதல் மனைவி சுனந்தாவே, பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளருக்கும் சசி தரூருக்கும் தொடர்புள்ளதாக பரபரப்பை கிளப்பினார். இந்த அதிரடி ஓய்வதற்குள் சுனந்தாவும் மர்மமான முறையில் இறந்து போய் பெரும் சர்ச்சை கிளம்பியது.
அமரீந்தர்சிங்- அரூசா ஆலம்
இது பஞ்சாப் காதல். 2004ஆம் ஆண்டுவாக்கில் பாகிஸ்தான் போன அம்ரீந்தர்சிங், அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் அரூசா ஆலமுடன் காதல் வயப்பட்டுப் போனார். 2007ஆம் ஆண்டு இந்தவிவகாரம் பஞ்சாப் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இருவரும் மாறி மாறி விளக்கம் கொடுத்து ஆறுதல்பட்டுக் கொண்டனர்.