கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் சுந்தருக்கு ரஷ்யாவின் உயரிய விருது!
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் ஆர். சண்முகம் சுந்தருக்கு ரஷ்ய அரசு உயரிய விருது அளித்துக் கெளரவப்படுத்தியுள்ளது.
ரஷ்ய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான Order of Friendship விருது சுந்தருக்கு அளிக்கப்பட்டது. இந்த விருதை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கட்கின் வழங்கிக் கெளறவித்தார். சனிக்கிழமை டெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கலந்து கொண்டார்.
1994ம் ஆண்டு இந்த விருது நிர்மானிக்கப்பட்டது. அமைதி, நட்புறவு, இரு தரப்பு ஒத்துழைப்பு, புரிந்து கொள்ளுதல் தொடர்பாக சிறப்பாக செயல்படும் ரஷ்ய மற்றும் வெளிநாட்டினருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பு அதிகாரி தாத்தியானா குடினோவா ஒன்இந்தியாவிடம் கூறுகையில், அதிபர் விலாடிமிர் புடின் கடந்த ஜனவரி மாதம் இந்த விருதை சுந்தருக்கு அறிவித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். அப்போது விருதை வாங்க முடியாத நிலையில் சுந்தர் இருந்ததால் விருதை தூதரகத்தில் வைத்திருந்தோம். தற்போதுதான் விழாவை நடத்த முடிந்தது என்றார்.
கூடங்குளம் அணு மின் நிலைய செயல்பாட்டுக்கு முக்கியப் பங்காற்றியவர் சுந்தர் என்பதால் அதைப் பாராட்டும் வகையில் இந்த விருதை ரஷ்யா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதைப் பெற்றுக் கொண்ட சுந்தர் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டம் நனவாக உழைத்த அனைத்து இந்தியத் தொழிலாளர்களுக்கும், நிபுணர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது என்றார்.
ரஷ்ய தொழில்நுட்பத்தில், ரஷ்ய அரசின் உதவியுடன் கடந்த 1988ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் கூடங்குளம் அணு மின் நிலையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.