தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 94.29 கோடியாக உயர்வு - டிராய் அறிவிப்பு!
டெல்லி: இந்தியாவில் நடப்பு 2014 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 94.29 கோடியாக அதிகரித்துள்ளது.
முந்தைய ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்த எண்ணிக்கை 93.30 கோடியாக இருந்தது.
தற்போதைய காலாண்டில் தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 1.07 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மதிப்பீட்டு காலாண்டில் மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை 1.04 கோடி அதிகரித்து 90.45 கோடியிலிருந்து 91.49 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது 1.15 சதவீத வளர்ச்சியாகும்.
அதேசமயம் சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 2.85 கோடியிலிருந்து 2.80 கோடியாக குறைந்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில் இன்டர்நெட் சந்தாதாரர் எண்ணிக்கை 3 சதவீதம் உயர்ந்து 25.16 கோடியிலிருந்து 25.91 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒரு ஜி.எஸ்.எம் வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் மாதாந்திர சராசரி வருவாய் மதிப்பீட்டு காலாண்டில் 113 ரூபாயிலிருந்து 119 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று சி.டி.எம்.ஏ வாயிலான சராசரி வருவாயும் 105 லிருந்து 112ஆக அதிகரித்துள்ளது என டிராய் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு "மொபைல் நம்பர் போர்டபிலிட்டி" வசதியை வரும் மே மாதத்திற்குள் முழுமையாக அளிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது இந்த வசதியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.தொலைத் தொடர்பு துறையின் இந்த புதிய உத்தரவு செயல்படுத்தப்படும் நிலையில் உள்நாட்டில் எங்கு சென்றாலும் ஒரே மொபைல் எண்ணை தக்க வைத்து கொள்வதோடு தேவையானால் சேவை நிறுவனங்களை மாற்றி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.