குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் 'டச் டிஎன்ஏ' என்றால் என்ன?
டெல்லி: குற்ற சம்பவம் நடந்த இடத்தில் டி.என்.ஏ. அதாவது மரபணு ஏதாவது உள்ளதா என்பதை கண்டுபிடிக்கப்படும் தடயவியல் முறையை டச் டிஎன்ஏ(Touch DNA) என்கிறார்கள். அண்மையில் தேசிய புலனாய்வுத் துறையினர் கையாண்ட பல வழக்குகளில் இந்த டச் டிஎன்ஏ முறை தான் பயன்படுத்தப்பட்டு வெற்றியும் காணப்பட்டுள்ளது.
பாட்னா மற்றும் கயா குண்டுவெடிப்பு வழக்குகள் ஆகட்டும் அல்லது அண்மையில் நடந்த லியாகத் ஷா விவகாரம் ஆகட்டும் சரியான தடயவியல் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதால் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது.
டச் டிஎன்ஏ என்றால் என்ன?
போலீஸ் அதிகாரிகள் அதிலும் பெங்களூர் போலீசார் சம்பவ இடத்தில் ஒரு தடயம் கூட இல்லை என்று அடிக்கடி தெரிவிக்கிறார்கள். உதாரணமாக சர்ச் தெருவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கு இன்னும் மர்மமாக உள்ளது. டச் டிஎன்ஏ முறையை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். குற்ற சம்பவம் நடந்த இடத்தில் உள்ள மரபணு ஏதாவது உள்ளதா என்பதை ஆய்வு செய்வது தான் டச் டிஎன்ஏ முறையாகும். சம்பவ இடத்தில் கிடக்கும் சிறு சிறு மாதிரிகளை வைத்து ஆய்வு செய்வதால் தான் டச் டிஎன்ஏ என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் கிடக்கும் பொருட்களில் ஒட்டி இருக்கும் தோல் செல்கள் ஆகியவை டச் டிஎன்ஏ மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த மாதிரியை ஆய்வு செய்தால் குற்றவாளியை கண்டுபிடிப்பது எளிதாகிவிடும்.
எச்சரிக்கை
தேசிய புலனாய்வு ஏஜென்சி டச் டிஎன்ஏ முறையில் நிபுணராகிவிட்டது. இம்முறை குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவினாலும் பின்னடைவுகளும் உள்ளது. சம்பவ இடத்தில் மாதிரியை சேகரிக்கையில் மிகவும் எச்சரிக்கையுடன் அதை எடுக்க வேண்டும். மாதிரியை சேகரிப்பவர் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவரது தோல் செல் மாதிரி சம்பவ இடத்தில் கிடக்கும் பொருள் மீது பட்டுவிட்டு குழப்பம் ஏற்படும்.
கயா குண்டுவெடிப்பு வழக்கு
கயா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி மாஸ்க் போட்டு புத்தபிக்கு போன்று வந்துள்ளார். சிசிடிவி கேமரா பதிவு இருப்பினும் தேசிய புலனாய்வு ஏஜென்சியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. குண்டை வைத்த பிறகு அந்த நபர் புத்தபிக்குவின் உடையை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டார். அந்த உடையில் இருந்த குற்றவாளியின் தோல் செல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் அது நுமன் என்பவருடையது என தெரிய வந்தது. இதையடுத்து ராஞ்சியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றால் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். ஆனால் அவரது வீட்டில் கிடந்த பையில் இருந்த தோல் செல்கள் சேகரிப்பட்டு டச் டிஎன்ஏ முறைப்படி ஆய்வு செய்யப்பட்டதில் புத்தபிக்குவின் உடையில் இருந்த செல்களும், பையில் இருந்த செல்களும் ஒத்துப் போயின.