மாணிக் சர்க்காரின் பாதத்தை தொட்டு வணங்கிய திரிபுரா புதிய முதல்வர்: ஒரு நெகிழ்ச்சி தருணம்
திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரின் பாதத்தை நேற்று புதிதாக பொறுப்பேற்ற பிப்லாப் தேவ் வணங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
Recommended Video
அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரின் காலில் விழுந்து வணங்கினார் அந்த மாநிலத்தில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிப்லாப் தேவ்.
திரிபுராவில் 25 ஆண்டுகால இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடந்த வாரம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் மூலம் விடை கொடுத்தனர். அந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
இதைதொடர்ந்து பாஜக சார்பில் பிப்லாப் தேவ் முதல்வராக பதவியேற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த மாநில ஆளுநரிடம் அவர் ஆட்சி அமைக்கவும் உரிமை கோரினார்.
பதவியேற்பு விழா
இந்நிலையில் நேற்றைய தினம் திரிபுரா முதல்வர் பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா , பிரதமர் நரேந்திர மோடி, திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேச்சு
இந்த விழாவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிப்லாப் தேவ், மாணிக் சர்க்காரின் பாதத்தை தொட்டு வணங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அனுபவம் தேவை
அவர் கூறுகையில், பதவியேற்பு விழாவின் போது சர்க்காரின் காலை தொட்டு வணங்கியது நம் பண்பாட்டை மதிப்பதற்காகத்தான். மேலும் திரிபுராவை 20 ஆண்டுகளாக ஆட்சி செய்த சர்க்கார் போன்ற மூத்த தலைவர்களின் அனுபவம் நமக்கு தேவை.
வாக்குறுதிகளுக்காக 100 நாட்கள் கெடு
தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற 100 நாட்கள் என காலக்கெடுவை நாங்களே விதித்து கொண்டுள்ளோம். அந்த காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொண்டோம் என்றார் பிப்லாப் தேவ்.
எளிமையின் சிகரம்
மாணிக் சர்க்கார் எளிமையான முதல்வர். அவர் 20 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் ஆட்சி செய்தும் ஒரு சொந்த வீடு கூட இல்லாத எளிமையான ஏழைகளின் முதல்வராவார். இதுபோன்ற ஒரு முதல்வருக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை என்பது பெருத்த ஏமாற்றமாக உள்ளது.