குஜராத் ஜஸ்டான் தொகுதி இடைத்தேர்தல்.. காங்கிரஸ் - பாஜக பலப்பரீட்சை!
குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதியில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
காந்திநகர்: குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதியில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
குஜராத்தின் ராஜ்கோட் அருகே இருக்கும் பெரிய நகரம்தான் ஜஸ்டான். இந்த தொகுதியில் கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குன்வாராஜித் பாவாலியா போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவர் கடந்த ஜூலை மாதம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவிற்கு சென்றார்.
இந்த நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க உள்ளார். இந்த தொகுதி காலியானதன் காரணமாக தற்போது அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
பாஜக, குன்வாராஜித் பாவாலியாவை அந்த தொகுதியில் தனது வேட்பாளராக நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி அவ்சார் நகியா என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. குன்வாராஜித் பாவாலியா அங்கு 4 முறை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு சவுராஷ்டிரா மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஆதரவு அளிக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் இந்த வாட்டாரத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை வென்றது. தற்போது இந்த இடைத்தேர்தல் மூலம் பாஜக அங்கு மீண்டும் கால் பதிக்க திட்டமிட்டு வருகிறது.
அதேபோல் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு ஆறுதலாக இந்த தேர்தலில் வெற்றிபெற பாஜக திட்டமிட்டுள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்றும் பாஜக நினைக்கிறது.
இன்று காலை 8 மணிக்கு அங்கு வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை அங்கு வாக்குப்பதிவு நடக்கும். இதற்காக 262 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜஸ்டான் தொகுதியில் 103 கிராமங்கள் உள்ளது.
இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படும். இந்த முடிவுகள் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.