டெல்லியில் அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்.. சுற்றுலா கைடு அட்டூழியம்… 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
இந்தியாவிற்கு வந்த அமெரிக்க பெண் பயணியை கைடு உட்பட 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வந்த பெண் பயணி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இது தொடர்பாக, அவருக்கு கைடாக இருந்தவர் உட்பட 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் டூரிஸ்டாக அமெரிக்க பெண் ஒருவர் டெல்லி வந்துள்ளார். அவர் கான்னாட் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். தான் தங்கி இருக்கும் ஓட்டல் நிர்வாகத்தின் மூலமாகவே ஒரு டூரிஸ்ட் கைடை ஏற்பாடு செய்துக் கொண்டு நகரத்தை சுற்றிப் பார்த்து வந்துள்ளார். டூரிஸ்டு கைடும் நகரத்தை சுற்றி காண்பித்துள்ளார்.
ஒரு நாள், அமெரிக்க பெண் தங்கி இருக்கும் ஓட்டல் அறைக்கே தன்னுடைய நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்து சுற்றிப் பார்ப்பதற்கான வழிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று டூரிஸ்ட் கைட் கூறியிருக்கிறார். இதனை உண்மை என்று நம்பிய அமெரிக்க பெண்மணி ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அறைக்குள் வந்த டூரிஸ்ட் கைடு உட்பட ஐந்து பேரும், அவருடன் நன்றாக பேசி இருந்துவிட்டு, சட்டென பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத அமெரிக்க பெண்மணி, மிரண்டு போய் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்றுவிட்டார். சொந்த நாட்டிற்கு சென்ற பிறகு அவர் தன்னுடைய குடும்பத்தாரிடம் நடந்த சம்பவம் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து மன அழுத்தத்திலேயே இருந்துள்ளார். பின்னர், அவர் தனது வக்கீல் தோழியிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.
பின்னர், அமெரிக்க பெண் இ-மெயில் மூலம் புகார் ஒன்று டெல்லி போலீசாருக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்ட டெல்லி போலீசார், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான அனைத்து விவரங்களை கேட்டுள்ளனர்.