ஹவாலா மூலம் பணம் கடத்தப்படுவது எப்படி?
டெல்லி: வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பது குறித்து நாம் தீவிரமாக பேசி வரும் நிலையில் இதற்கு அடிப்படையாக இருக்கும் ஹவாலா பணப் பரிவர்த்தனை குறித்தும் ஆராய வேண்டிய தருணம் இது.. இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களில் மட்டுமே ஆண்டுக்கு ரூ23 ஆயிரம் கோடி அளவுக்கு ஹவலா பரிவர்த்தனை நடைபெறுவது போன்ற திடுக்கிடும் தகவல்களும் கிடைத்திருக்கின்றன.
"ஹவாலா" எனப்படுகிற சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான தொடர் கட்டுரை இது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகள், நிழல் உலக தாதாக்கள், தீவிரவாதிகள் மற்றும் சாமானியர்களும் கூட இந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனையான ஹவாலா முறையைப் பின்பற்றுகின்றனர். இந்தத் தொடரின் முதல் பாகத்தில் ஹவாலா என்றால் என்ன? இந்த பணப் பரிவர்த்தனை எப்படி நடைபெறுகிறது? சட்டவிரோதம்தான் எனத் தெரிந்தே இந்த ஹவாலா முறையை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவாக ஆராயலாம்..
ஹவாலா என்பது என்ன?
ஹவாலா என்பது அரபி சொல். இதற்கு பரிமாற்றம் என்பது அர்த்தம். மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, இந்தியா துணைக் கண்டனம் ஆகிய நாடுகளில் பணப் பரிவர்த்தனை தரகர்கள் மூலமாக பெருமளவு பணத்தை பரிமாற்றம் செய்யும் முறை என்கிறது விக்கிபீடியா. இந்த பரிவர்த்தனையானது வழக்கமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இணையான ஒரு கட்டமைப்பாக செயல்படுகிறது. தங்கம் மற்றும் பெருமளவு பணத்தை பயணங்களின் போது எடுத்துச் செல்ல முடியாத லையில்தான் ஒரு வர்த்தகமாக ஹவாலா உருவானது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு இந்த ஹவாலா முறையைத்தான் பயன்படுத்தினர்.
எதற்காக ஹவாலா
ஏனெனில் சட்டப்பூர்வமான வங்கிகள் மூலம் அனுப்பும்போது பெருமளவு வரி கட்ட வேண்டுமே என்கிற அச்சம்.. அத்துடன் வங்கி போன்ற சட்டப்பூர்வமான நிறுவனங்கள் ஏராளமான ஆவணங்களைக் கேட்கும்.. ஆனால் ஹவாலா முறையில் குறைவான ஆவணங்களே போதுமானது என்பதால் இதைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஹவாலா நடைமுறையில் கமிஷன் செலவும் குறைவு.. குறிப்பிட்ட நபருக்கு வங்கிகள் மூலம் பணம் கிடைக்க 2,3 நாட்களாகும்.. ஆனால் ஹவலா முறையில் எவ்வளவு விரைவாகவும் பணம்
கிடைத்துவிடும்
ஹவாலா நடைமுறை என்ன?
ஹவாலா பணத்தைப் பெறுவோரை ஹவாலாவாலாக்கள் என அழைக்கலாம்.. ஒரு நபர் ஹவாலாவாலாவிடம் பணத்தைக் கொடுத்துவிட்டால் ஒரு பாஸ்வேர்டு தருவார்.. அந்த ஹவாலாவாலா மற்றொரு நாட்டில் உள்ள தமது ஏஜெண்ட்டை உடனே தொடர்பு கொண்டு தாம் கொடுத்திருக்கும் பாஸ்வேர்டை தெரிவிப்பார். இந்த பாஸ்வேர்டை தெரிவிக்கும் நபரிடம் பணம் ஒப்படைக்கப்படும். அண்மைக்காலமாக தேசிய புலனாய்வு அமைப்பானது ஸ்டார், பான் ஹாயா போன்ற பல பாஸ்வேர்டுகளை கண்டுபிடித்திருக்கிறது.
தேர்தல் காலத்தில்...
ஆனால் தற்போது தீவிரவாதிகளும், நிழல் உலக தாதாக்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூட இந்த ஹவாலா முறையை அதிகம் பயன்படுத்துவதால் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையும் தலைவலியும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் ஹவாலா முறையில்தான் பெருமளவு நிதியை பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஹவாலாவாலாக்களுக்கு கைமாறும் தொகையில் 2% கமிஷன் கிடைக்கும்.
இந்தியாவில்...
இந்தியாவில் ஹவாலா பணம் எப்படி கைமாறுகிறது என்பது குறித்து பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் திடுக்கிட வைக்கும் தகவலைச் சொல்கிறார். அதாவது கடந்த 60 ஆண்டுகளில் வரி ஏய்ப்பின் மூலம் நாம் 1.5 டிரில்லியன் டாலரை இழந்திருக்கிறோம்...இதில் 40% ஹவாலா மூலமே நடந்துள்ளது என்கிறார்..
ஹவாலா சட்டவிரோதம்..
ஹவாலா பரிவர்த்தனை என்பது மிகக் கடுமையான சட்டவிரோதச் செயல். ஆனால் நமது நிர்வாகக் கட்டமைப்பில் இதனை முழுமையாக ஒழித்துவிட முடியாத அளவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. ஒருநாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் சட்டப்பூர்வமான வங்கிகளை நாட முடியாது. அதனால் அவர்கள் ஹவாலா முறையை நாடுகின்றனர். ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கவும், போதைப் பொருள் கும்பல் அல்லது தீவிரவாத இயக்கங்கள் நிதி திரட்டவும் ஹவாலா முறை பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவந்ததும் இது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் (பெமா) 2000, மற்றும் அன்னிய செலாவணி மோசடி (பிஎம்எல்ஏ) 2002 ஆகியவற்றின் கீழ் ஹவாலா பரிவர்த்தனை தண்டனைக்குரியது.
ஹவாலா உயிர்ப்புடன் இருப்பது எப்படி?
இதுவரை ஹவாலா ஏஜெண்டுகள் எவர் மீதும் மோசடிப் புகார் வந்ததே இல்லை என்பதால் மிகவும் நம்பகமான பரிவர்த்தனையாக பார்க்கப்படுகிறது; சாதாரண வங்கிகள் மூலம் பணம் செலுத்தும் போது நாம் செலுத்தும் கமிஷன் தொகையைவிட மிக மிக குறைவு; வங்கிகளில் யார்... யாருக்கு ஏன் பணம் கொடுக்கிறார்கள் என்கிற வெளிப்படைத் தன்மை அவசியம்.. அதெல்லாம் ஹவாலாவுக்கு தேவையே இல்லை; கணக்கில் வராத பணத்தை பெறுவதற்கான மிக எளிமையான வழி என்பதாலேயே ஹவாலா உயிர்ப்போடு இருக்கிறது.
(இந்தியாவில் "ஹவாலா"வாலாக்களின் தலைநகராக கேரளா உருவெடுத்த கதையை நாளை பார்க்கலாம்)